நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் பவ விடயங்களுன்னு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை வருமாறு,
1. பயங்கரவாத தடைச் சட்டத் தீர்மானம்
அரசாங்கம் முன்மொழிந்துள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” சட்டமூலத்தை அமுல்படுத்தக்கூடாது என்றும், தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கிடையே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
புதிய சட்டமூலம் தற்போதைய சட்டத்தை விடக் கடுமையானது என சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள் கருத்தரங்குகளில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர்களும் கவலை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் குரலை ஒடுக்கக்கூடிய சட்டங்களுக்கு எதிராக மக்கள் சார்பில் குரல் எழுப்புவது சபையின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
2. கோப்பாய் பொலிஸ் நிலைய முறைப்பாடு
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்டி தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் தவிசாளர் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் இயங்கிய தனியார் விளம்பர ஒலிபரப்புச் சேவையை நிறுத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதனை மீறி சேவை தொடரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபை நடைமுறைகள் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் தான் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உண்மையில் சபைதான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும் தெரிவித்தார்.
3. வெளிவாரி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட வெளிவாரி ஊழியர்களுக்கு அதிக தொகை வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
குறைந்த கொடுப்பனவு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சபை தீர்மானத்தின் மூலம் சட்டப்படி கொடுப்பனவு உயர்த்தப்பட்டதாகவும், அதற்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவளித்ததாகவும் கூறினார்.
மீள் சுழற்சி மையங்களில் கூடுதல் பணியாளர்கள் இணைக்கப்பட்டதாலும் மொத்த செலவு அதிகரித்ததாக அவர் விளக்கமளித்தார்.
4. சபை அமர்வைக் காண கொடுப்பனவு வழங்கப்படுவது குறித்த குற்றச்சாட்டு
சபை அமர்வைப் பார்வையிட கொடுப்பனவு வழங்கப்படுவதாக கூறப்படும் தகவல் பொய்யானது என அவர் தெரிவித்தார்.
வரதராஜன் பார்த்திபன் என்ற நபர் அலுவலக உதவியாளராகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றி வருவதாகவும், அவருக்கு வழங்கப்படுவது அவரது பணிக்கான உரிய கொடுப்பனவே அன்றி தேவையற்ற செலவல்ல என்றும் விளக்கமளித்தார்.
கழிவகற்றல் மேம்பாடு, GPS வசதிகள், தரவுத்தள பராமரிப்பு, ஊடக முகாமைத்துவம் உள்ளிட்ட பல பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்
நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை தன்னால் இயன்ற பணிகளினை இயலுமானவரை வினைத்திறனாக செய்து வருகின்றது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.