மலையகத்தில் தொடரும் மழை: இரு பிரதான வீதிகளில் மண்சரிவு, கற்பாறைகள் சரிவு கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் உலப்பனை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால், பாறைகள் மற்றும் மண் குவியல்கள் பிரதான வீதியில் வீழ்ந்துள்ளன.இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் வாகனப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.வீதியில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை ஹட்டன்–போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை பாரிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஹட்டன் – போடைஸ் – டயகம செல்லும் குறுக்கு வீதியில் வாகனப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு ஹட்டன் வலய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் வீரசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சரிந்து வீழ்ந்த கற்பாறைகளை அகற்றி வீதியை மீளத் திறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.