வடக்கு மாகாணத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போட்டிப் பரீட்சை முறையில் மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் இன்று (05.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்தக கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இதனூடாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மக்களது பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, கிராமிய பொருளாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம்.
அதுமட்டுமல்லாது வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக குளங்கள், புனரமைக்கப்படாமலும், தூர் வாராமலும், பழுதடைந்தும் காணப்படுகின்றது. இதனை திருத்தியமைக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. விசேடமாக இந்த நிதியத்தின் மூலம் இதை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகன்றது. விவசாயத்திலும் நெற்பயிற்செய்கை பிரதான இடத்தை பெறுகின்றது. சிறுபோக நெற் செய்கைக்கு மக்கள் அவதிப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளும் நிலத்தின் அளவு குறைவாகவுள்ளது. அதற்கு குளத்து நீர் போதாமை காரணமாகும்.
குளங்கள் புனரமைப்பு செய்வதன் மூலம் சிறுபோக நெற் செய்கையை அதிகரிக்க முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் மட்டுமன்றி எமது பிரதேச அரிசி தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். கிராமிய வீதிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தவிர, கல்வியில் இடமாற்றங்கள் பூதாகரப் பிரசசனையாகவுள்ளது. வடமாகாணத்தில் இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார், துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேணடிய ஆசிரியர்களில் 99 வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை, அந்த வலயங்களுக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில் 29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளார்கள். 4 ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைககளம் கரிசனையோடு கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது இடமாற்றம் சிலவற்றில பிழைகள் இருக்கிறது. தெரிவுகளில் தவறுகள் உள்ளது. எதிர்வரும் காலத்தில் துல்லியமான தகவல்களப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம்பெறாத வகையில் இடமாற்றம் வழங்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசாங்கத்தின் சுற்று நிருபம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் பட்டதாரிகளின் வேண்டு கோளுக்கு இணங்க அந்த சுற்று நிருபம் நிறுத்தப்பட்டுளது. புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சுற்று நிருபத்தில் 1756 ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். பற்றாக்குறையில் 50 வீதம் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியும். ஆனாலும் அதில் ஒரு தடை உள்ளது. ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கையும் விரைவாக முடித்து இந்த வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க எண்ணியுள்ளோம். பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித் தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்கு தேவையான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் இடமாற்றப் பிரச்சனையையும் தீர்க்க முடியும். இது தொடர்பில் ஆளுனருடன் பேசியுள்ளோம்.
எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
எமது காலத்தில் அதனை ஏனைய மாகாணங்களை போல முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதை நோக்கி எமது பயணம் இருக்கிறது. எமக்கு கட்சி பேதம் கிடையாது. உள்ளுராட்சி மன்றங்களில பல்வேறு கட்சிகள் ஆடசி அமைத்துள்ளன.
அவை எம்மோடு இணைந்து பணியாற்றினால் வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலுக்கு அப்பால் நாம் செயற்பட தயராகவுள்ளோம் அதற்கு அவர்களது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம் என்றார்