பாடசாலையொன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி சென்று தேனீக்கள் கொட்டிய நிலையில் 63 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள குறித்த பாடசாலை வளாகத்திற்குள் இன்று(30) காலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களையும் தேனீக்கள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் குறித்த பாடசாலை மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலே 45வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக தேனிக்கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களும் தேறிவருவதாகவும் , எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும் , ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.
அத்தோடு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டதோடு, பாடசாலைச் சமூகத்தினரோடும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.
குறிப்பாக ஒட்டுசுட்டான் மாகாவித்தியாலய கட்டிடங்களில் காணப்படும் தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஏற்கனவே பாடசாலைச் சமூகம் கடந்த 02.09.2024 ஆம் திகதிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தும் குறித்த தேனீக் கூடுகளை அகற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் பாடசாலைச் சமூகம் முறையிட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைச் சமூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாடவேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.
அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டிடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று இரவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








